நீங்கள் இடம்மாறி இருக்கிறீர்கள், அதற்காக துதி பாடத் தேவையில்லை! ஓபிஎஸ் vs செங்கோட்டையன்
நீங்கள் இடம்மாறி இருக்கிறீர்கள். அதற்காக துதி பாடத் தேவையில்லை என பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ஓ. பன்னீர்செல்வம் பேச்சுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.
"தவெக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிர் உரிமைத் தொகை உயரவில்லை. ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வரும் என்று பெண்கள் எதிர்பார்த்திருந்த இனிப்பான செய்தி வரவில்லை. மாணவர்களின் இடைநிற்றலை 15,000 நிதியுதவி உள்பட திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.
மகளிர் விடியல் பேருந்து பயணத்தை விரிவுபடுத்தி அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசம் என்ற அறிவிப்பையும் பெண்கள் எதிர்பார்த்து ஏமாந்து போயுள்ளனர். எனவே, புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன். புதிய அரசின் பட்ஜெட்டில் எந்த புதிய திட்டங்களும் இல்லை.
மத்திய அரசின் நிதிப்பகிர்வு கூட போதுமானதாக இல்லை என்றுகூட பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை" என்று கூறினார். பின்னர் செங்கோட்டையன், "3 மாதத்தில் சரித்திரம் படைக்க இயலாது. அப்படி நீங்கள் சரித்திரம் படைத்தால் சொல்லுங்கள். தூய ஆட்சியாக தவெக ஆட்சி இருக்கிறது. நீங்கள் இடம்மாறி இருக்கிறீர்கள். அதற்காக இவ்வளவு துதி பாடத் தேவையில்லை" என்று கூறினார். உடனே ஓபிஎஸ், "அந்த இடத்தை முதலில் மாற்றியவர் செங்கோட்டையன்தான் என்று கூறிக்கொள்கிறேன்" என்றார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
அப்போது அமைச்சர் ராஜ்மோகன், "அண்ணன் செங்கோட்டையன் இடம் மாறியபோதும் அவரின் இதயத்திற்கு அருகில் இருக்கும் நிழல் படத்தை மாற்றவே வேண்டாம் என்று சொன்னவர் எங்கள் தலைவர். ஆனால் அண்ணன் ஓபிஎஸ் பாக்கெட்டை பார்க்கும்போது இடமும் மாறி இருக்கிறது, இதயமும் மாறி இருக்கிறதோ என்றே தோன்றுகிறது" என்றார்.