Select Location
All Locations
State
Region
City / District
வேலையே தராமல் மாதந்தோறும் முழுச் சம்பளம்- மென்பொருள் பொறியாளரின் சலிப்பு பதிவு

வேலையே தராமல் மாதந்தோறும் முழுச் சம்பளம்- மென்பொருள் பொறியாளரின் சலிப்பு பதிவு

தற்போதைய கார்ப்பரேட் உலகில் வேலைப்பளு என்பது மிக முக்கியமான ஒரு பிரச்சனையாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், அதற்கு முற்றிலும் மாறான ஒரு விசித்திரமான நிகழ்வு சமூக வலைதளமான ரெடிட்டில் (reddit) இந்திய மென்பொருள் பொறியாளர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

'டெவலப்பர்ஸ் இந்தியா' என்ற இணையப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு புதிய ஊழியர், தான் ஒரு முன்னணி பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டாளராகப் பணியில் சேர்ந்ததில் இருந்தே தனக்கு எந்தவொரு வேலையுமே தரப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். நிறுவனம் இவருக்குத் தாராளமாக முழுச் சம்பளத்தையும் வழங்கி வரும் நிலையிலும், செய்ய வேலை இல்லாமல் அமர்ந்திருப்பது தனக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தனது பதிவில் விரிவாக விவரித்துள்ளார்.

அந்த ஊழியர் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் சேர்ந்தவுடன் தனது மேலாளரை நேருக்கு நேர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தனது முழுமையான தகவல்களை பகிர்ந்து, தனது தொழில்நுட்பத் திறமைகளை விவரித்த போதிலும், 'உங்களுக்கான தகுந்த வேலை வரும்வரை காத்திருங்கள்' என்று மட்டுமே அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விசித்திரமான கார்ப்பரேட் நிலையைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது விதவிதமான ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் பகிர்ந்து இந்த விவகாரத்தை வைரலாக்கி வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் இதனை "வேலையே இல்லாத இலவசச் சம்பளம்" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், கார்ப்பரேட் துறையில் அனுபவம் வாய்ந்த மூத்த ஊழியர்கள் சிலர் அவருக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், "பன்னாட்டு நிறுவனங்களில் சும்மா காத்திருக்கக் கூடாது; வேலை செய்யாமல் சும்மா இருக்கும் ஊழியர்களைத் தான் திடீர் ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் போது முதலில் தூக்குவார்கள், எனவே எச்சரிக்கையாக இருங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போதைக்குத் தனக்குக் கிடைத்துள்ள இந்த ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, அந்த வாலிபர் தனது பழைய திறமைகளை மெருகேற்றி, புதிய தொழில்நுட்பங்களைக் கற்று வருவதாகக் கூறியுள்ளார். வேலைப்பளுவால் அவதிப்படும் உலகிற்கு மத்தியில், வேலை தராவிட்டாலும் திறமையான ஊழியர்களைத் தங்களது போட்டி நிறுவனங்களுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக முடக்கி வைக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் விசித்திரமான யுக்தி இது என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Nakkeeran 1 hour ago
Home Flash News