எண்ணூர் முகத்துவாரத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்ததற்கு தொழிற்சாலை கழிவுகளே காரணம்: 8 மீனவ கிராம மக்கள் குற்றச்சாட்டு
திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவார பகுதியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்ததற்கு தொழிற்சாலை கழிவுகளே காரணம் என்று 8 மீனவ கிராம மக்கள் குற்றம்சாட்டினர். சென்னை எண்ணூர் முகத்துவாரப்பகுதியில் நேற்று பல்வேறு வகையான மீன்கள் டன் கணக்கில் செத்து மிதந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுசம்பந்தமாக மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ‘’தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் தண்ணீரில் கலப்பது, வடசென்னை அனல் மின்நிலையத்தில் சுடுநீர் ஆற்றில் விடுவது போன்ற காரணங்களால் மீன்கள் செத்துவிடுகிறது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று வலியுறுத்தினர். இந்த நிலையில், எண்ணூர் முகத்துவார ஆற்று கரையோரம் இறந்து ஒதுங்கிய மீன்களால் துர்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.