ஆதவ் அர்ஜுனா Vs உதயநிதி: பேரவையில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பேசியது என்ன?
சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே பேரவையில் காரசார விவாதம் நடந்தது. சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “நேற்று நடைப்பெற்ற தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில் தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் விஜய் பேசியது குறித்து சில ஊடகங்கள், சில கட்சிகள் போலி பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. ‘ஃபேர் டீலிமிட்டேஷன்’ (FAIR DELIMITATION) தேவையில்லை ‘ஃப்ரீஸ் டீமிலிட்டேஷன்’ (FREEZE DELIMITATION) தான் தேவை. 543 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றம்தான் நீடிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முதல்வர் விஜய்யும், அரசும் உறுதியாக இருக்கிறது” என்று அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து பேசிய,எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் பேசிய உரை குறித்து அமைச்சர் பேசினார். 543 எம்பிக்கள் என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்றுதான் தீர்மானத்தில் உள்ளது. அந்த தீர்மானத்தைத்தான் பேரவையில் நிறைவேற்றியுள்ளோம். இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாமே தவிர குறையக் கூடாது. தமிழகத்தின் தொகுதி விகிதாச்சாரத்தின் சதவீதம் 7.18 என்ற அளவிலேயே தொடர வேண்டும். ஆனால், முதல்வரின் நேற்றைய உரையை 543 என்ற எண்ணிக்கையை ஃப்ரீஸ் (FREEZE) செய்ய வேண்டும் என எந்த இடத்திலும் இடம்பெறவில்லை என்பதை கவனத்துக்கு கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அரசியல் பசப்பு வார்த்தைகள் எல்லாம் வேண்டாம். தமிழகத்துக்கு 50 சதவீதம் அதிகமாக எம்.பி-க்கள் தருகிறோம் என மத்திய அரசு சொன்னாலும் அதனை நாம் எதிர்க்க வேண்டும். அன்றைய காலத்தில், வாஜ்பாய் அரசு எப்படி 543 எண்ணிக்கையை ஃப்ரீஸ் (FREEZE) செய்தார்களோ, அதே போல சிறப்பு சட்டத்தை தான் கொண்டுவர வேண்டும். அதுக்குத்தான் பேரவையில் தீர்மானமும் கொண்டு வந்துள்ளோம்.