இந்திய அணி 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது: இலங்கை அணி தடுமாற்றம் | கொழும்பு டெஸ்ட்
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. துருவ் ஜூரெல் 115 ரன்களும், ரிஷப் பந்த் 63 ரன்களும் விளாசி அசத்தினர். இதையடுத்து விளையாடிய இலங்கை அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. கொழும்பு நகரில் உள்ள சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 85 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது.
தேவ்தத் படிக்கல் 117, ஷுப்மன் கில் 50, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45, ரவீந்திர ஜடேஜா 43, கே.எல்.ராகுல் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். துருவ் ஜூரெல் 7, சரண்ஷ் ஜெயின் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. சரண்ஷ் ஜெயின் 6 ரன்கள் எடுத்த நிலையில் அசிதா பெர்னாண்டோ பந்தில், 2-வது சிலிப் திசையில் கமில் மிஷாராவின் அபாரமான கேட்ச் காரணமாக ஆட்டமிழந்தார்.
இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தில் காயம் காரணமாக ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறி இருந்த ரிஷப்பந்த் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 81 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் தனது 21-வது அரை சதத்தை கடந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 110-வது ஓவரில் 400 ரன்களை கடந்தது. மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 112 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 419 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 63, துருவ் ஜூரெல் 59 ரன்கள் சேர்த்து இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் கேஷரா நுவந்தா வீசிய முதல் பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் விளாசிய பந்து லாங் ஆஃப் திசையில் லகிரு உதராவிடம் கேட்ச் ஆனது. ரிஷப் பந்த் 89 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்தார். 7-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த், துருவ் ஜூரெல் ஜோடி 112 ரன்கள் குவித்தது.