தவெக எம்எல்ஏ ஜல்லிக்கட்டு போட்டியை இழிவுபடுத்திய விவகாரம் - முதல்வர் மன்னிப்பு கேட்க அதிமுக வலியுறுத்தல்
சென்னை: தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி தவெக எம்எல்ஏ கருப்பையா இழிவாக பேசியுள்ளதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த விவகாரத்தில் தவெக அரசை கடுமையாக சாடியுள்ள அதிமுக, தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.வரலாற்று நூல்களைப் படித்தல் அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 'ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது. சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்? மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?