அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் இந்திய இணைய சேவை... செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைக்கு ஒப்புதல்!
இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் பிராட்பேண்ட் இணைய சேவைகளை வழங்குவதற்கு தொலைத்தொடர்பு துறை ஒப்புதல் அளித்துள்ளது. செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அளித்த பல்வேறு பரிந்துரைகளுக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் பிராட்பேண்ட் இணைய சேவைகளை வழங்க மத்திய தொலைத்தொடர்பு துறை இசைவு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், எலான் மஸ்கின் ஸ்டார்லிங், ஒன் வெப் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களின் ஆண்டு வருவாயில் 5 விழுக்காடு தொகையை அலைக்கற்றை சேவை கட்டணமாக வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இந்தக் கட்டணம் 4% ஆக குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. செயற்கைக்கோளுக்கான அலைக்கற்றை 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொலைத்தொடர்பு துறையின் அனுமதி மட்டுமே தற்போது கிடைத்துள்ள நிலையில், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகே, இந்தியாவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை வணிக ரீதியாகத் தொடங்க வாய்ப்புள்ளது.