தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
மதுரை: மறைந்த பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவின் உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவர் தனது உடலை தகனம் செய்ய விரும்பியிருந்ததால், அதன்படி தகனம் செய்யப்பட்டது. புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். மதுரையில் அவரது உடலுக்கு தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், திரளானோர் அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவையடுத்து முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், திரைக்கலைஞர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
சாலமன் பாப்பையாவின் இறுதி ஊர்வலம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அவரது உடலை சுமந்து வந்த வாகனத்துக்கு பொதுமக்கள் வழிநெடுக அஞ்சலி செலுத்தினர். மதுரை வெப் மெமோரியல் தேவாலயத்தில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, அமைச்சர்கள் நிர்மல் குமார், விஸ்வநாதன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.