நில உரிமையாளர்களுக்கு நற்செய்தி! பட்டா, சிட்டா இனி ஒரே ஆவணம் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டு மக்கள் தங்களின் நிலத்தின் பட்டா, சிட்டா, எப்எம்பி பெறும் நடைமுறையில் முக்கிய மாற்றங்களை அரசு கொண்டு வந்துள்ளது. பட்டா, சிட்டா, எப்எம்பி ஆவணங்களை ஆன்லைனில் இனி ஒரே ஆவணமாக பெறும் வகையில், எல்லா சேவைகளும் ஆன்லைனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இனி இவற்றை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். இதுவரை நில உரிமையாளர்கள் தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களை வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் சமர்ப்பிக்க இதுவரை தனித்தனியாக பதிவிறக்கம் செய்து வந்தனர்.
இந்தச் சிரமத்தைக் குறைக்க, கடந்த 2021-2022 மற்றும் 2024-2025 சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின்படி, பட்டா, சிட்டா, எப்எம்பி உள்ளிட்டவற்றை எளிதில் ஆன்லைனில் பெறும் புதிய சேவைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இச்சேவைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த நில ஆவணம் (Integrated Land Record) :
நில உரிமையாளர்கள் தங்களது நிலம் தொடர்பான ஆவணங்களை வங்கிகள் மற்றும் இதர அலுவலகங்களில் சமர்பிக்கும் பொருட்டு, https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளத்தில் அவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்து வழங்கும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் இந்த மூன்று ஆவணங்களையும் ஒருங்கிணைத்து ஒரே ஆவணமாக வழங்கும் பொருட்டு, கடந்த 2021 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இனிமேல் நில உரிமைதாரர்களுக்கு இந்த மூன்று ஆவணங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே ஆவணமாக வழங்கப்படவுள்ளது. தங்களது நிலம் சார்ந்த மாவட்டம், வட்டம், கிராமம், புல எண், உட்பிரிவு எண் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து https://eservices.tn.gov.in/eservicesnew/home.html இணையதளத்தில் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.