அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குல்... ஆனாலும், ஈரானின் தோல்வியை சாத்தியமற்றதாக்கிய மாஸ்டர் மைண்ட்; அலி ஜஃபாரி யார்?
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தினாலும் ஈரானின் தோல்வியை சாத்தியமற்றதாக மாற்றிய அலி ஜஃபாரி குறித்து பார்க்கலாம். 2003-ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தபோது, சதாம் உசைனின் ராணுவத்தை வீழ்த்த வெறும் 26 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், ஈரானில் இருந்த ஒருவர் சதாம் உசைனின் வீழ்ச்சியைப் போல ஈரான் ஆட்சியும் சரிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அந்த நபர் தான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் முன்னாள் தலைமைத் தளபதியான மேஜர் ஜெனரல் முகமது அலி ஜஃபாரி ஆவார்.
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கையில் ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவருடன் மேலும் சில முக்கியத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். 'இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் வார்' அறிக்கையின்படி, ஈரானின் கட்டுப்பாட்டு அமைப்பை முழுமையாகச் சிதைப்பதும், அவர்கள் திருப்பித் தாக்குவதைத் தடுப்பதுமே இந்தத் தாக்குதலின் நோக்கமாகும். ஆனால், அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்பார்த்தது போல ஈரான் ஆட்சி சரிந்துவிடவில்லை.
தாக்குதல் நடந்து ஏறக்குறைய இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், ஈரான் இடைவிடாமல் தாக்குதல்களை நடத்தி, ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் போர்க்களமாக மாற்றியுள்ளது. ஈரானின் உயர்மட்டத் தலைமை முழுமையாக அழிக்கப்பட்டாலும், அந்த நாடு தொடர்ந்து போரிடுவதை உறுதி செய்யும். அதாவது, ஈரான், தலைமையின் நேரடி உத்தரவு இல்லாமலேயே தன்னிச்சையாகச் செயல்படும் திறன் கொண்டவை.
யார் இந்த ஜஃபாரி?
RAND அமைப்பு வெளியிட்ட 2013-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஜெனரல் ஜஃபாரி ஒரு ஈரானிய ராணுவ அதிகாரி ஆவார். 1979 முதல் 1989 வரை நீடித்த ஈரான்- ஈராக் போரில் பங்கேற்ற ஜஃபாரி, படிப்படியாக உயர் பதவிகளை அடைந்தார். போருக்குப் பிறகு, 1992-ல் அவர் புரட்சிகர காவல் படையின் ஒட்டுமொத்தத் தளபதியாகவும், தெஹ்ரானின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான 'சாரல்லா' என்ற உயரடுக்கு பிரிவின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
2005-ஆம் ஆண்டில், அவர் புரட்சிகர காவல்படையின் 'மூலோபாய ஆய்வு மையத்தின்' இயக்குநராக நியமிக்கப்பட்டார். அமெரிக்க அமைதி நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஜஃபாரி இயக்குநராக இருந்த காலத்தில், ஈரான்- ஈராக் போர் மற்றும் 2003-ல் அமெரிக்கத் தலைமையிலான படைகள் ஈராக் மீது நடத்திய படையெடுப்பு ஆகியவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, ஈரானின் 'மொசைக் கோட்பாட்டை' உருவாக்கினார்.
மொசைக் கோட்பாடு
அதன்பின்னர், அவர் 2007-ஆம் ஆண்டில் புரட்சிகர காவல் படையின் ஒட்டுமொத்தத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். தனது பதவிக்காலம் முழுவதும், அவர் 'மொசைக் பாதுகாப்பு' கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் செலவிட்டார்.
அந்தத் தற்காப்பு முறைதான், தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஈரானின் அசைக்க முடியாத மீள்திறனை தீர்மானிக்கிறது.
2005-ல் இந்தத் தற்காப்பு முறையைச் செயல்படுத்தத் தொடங்கிய ஈரான், 2007-ல் ஜஃபாரி புரட்சிகர காவல் படையின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிறகு அதனைத் தீவிரப்படுத்தியது. சூஃபான் மையத்தின் (Soufan Centre) அறிக்கையின்படி, மொசைக் கோட்பாடானது ஈரானின் புவியியல் அமைப்பு, கரடுமுரடான மலைகள், பரந்த உட்புறப் பகுதிகள் மற்றும் பரவலாக உள்ள மக்கள் மையங்களைப் பயன்படுத்தி, வலிமையான ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நீண்டகாலப் போராட்டத்தை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டது ஆகும்.