பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் தொண்டர்கள்!
நீட் வினாத்தாள் கசிவின் விளைவாக மத்திய கல்வி அமைச்சரை பதவி விலகக் கோரி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டனர். கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நிகழ்ந்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அந்தத் தேர்வானது ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
இதனிடையே நாடுமுழுவதும் பல்வேறு தரப்பினர் இந்த சம்பவத்தைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரியும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் பாஜக மாநிலத் தலைமையகத்தை முற்றுகையிட்டனர். மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் மற்றும் தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் விடுத்துள்ளனர். இந்த முற்றுகையின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, “நீட் வினாத்தாள் கசிவின் முக்கிய பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் ஆவார். இதன் பின்னணியில் உள்ளவரும் அவர்தான். பணம் சம்பாதிக்கப்படுகிறது, அரசாங்கங்கள் சீர்குலைக்கப்படுகின்றன. 2024-ல் நீட் வினாத்தாள்கள் கசிவதாகவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார். ஆனால் அது செய்யப்படவில்லை. லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் அழிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.