Select Location
All Locations
State
Region
City / District
அசாம் மாநிலத்தில் கனமழை & வெள்ளத்திற்கு 3.62 லட்சம் மக்கள் பாதிப்பு.!! 10 பேர் உயிரிழப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை & வெள்ளத்திற்கு 3.62 லட்சம் மக்கள் பாதிப்பு.!! 10 பேர் உயிரிழப்பு 

திஸ்பூர்: அசாம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்து உள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அசாம் மாநிலத்தின் 16 மாவட்டங்களை சேர்ந்த சுழற் 3.62 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சிவசாகர், சராடியோ, ஜோர்ஹாட், திப்ருகர், சோனித்பூர், விஸ்வநாத், கோலகாட், தேமாஜி, நாகோன், கர்பி ஆங்லாங், சிராங், கச்சார், உதல்குரி, காம்ரூப் மற்றும் காம்ரூப் மெட்ரோ உள்ளிட்ட 16 மாவட்டங்களில் சமீப நாட்களாக மிகபலத்த மழை கொட்டி வருகிறது.

இதனால் இதுவரை 794 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகள் அபாயக் கட்டத்தைத் தாண்டி ஓடுவதால், 19,000 ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அரசு அமைத்துள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

குறிப்பாக காம்ரூப், காம்ரூப் மெட்ரோ மற்றும் ஜோர்ஹாட் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகர்ப்புற பகுதிகளில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது திருப்பி விடப்பட்டுள்ளன. படகு சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன

மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவற்றுடன் இணைந்து இந்திய ராணுவமும் மீட்புப் பணிகளில் களமிறங்கியுள்ளது. சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை கடும் வெள்ளத்தில் சிக்கி தவித்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்களை மீட்புப்படையினர் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Dinakaran 6 hours ago
Home Flash News