“தேவையில்லாத அவதூறுகளை உளறுகிறார்” - நிர்மல்குமாருக்கு உதயநிதி கண்டனம்!
மாநிலம் முழுவதும் சில மாவட்டங்களில் அண்மைக் காலமாக ஆங்காங்கே மின்வெட்டு மற்றும் அடிக்கடி வோல்டேஜ் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளன. அதாவது பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் 1 மணி நேரம் 3 மணி நேரம் வரை அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் வோல்டேஜ் பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார். மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் ‘ப்யூஸ் போன’ த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.